சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு, “ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ்” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் .
சர்வதேச போதைப்பொருள் எதிர்ப்பு தினம் வருகின்ற (26.06.2026) முன்னிட்டு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சார்பில் ஸ்டார்ட் ரன் ஸ்டாப் டிரக்ஸ் போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டத்தில் கலந்து கொள்ள மாணவ, மாணவியர்கள் மற்றும் இளைஞர்கள் பங்கேற்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு விளையாட்டை ஒரு சக்தி வாய்ந்த சமூக மாற்றக் கருவியாகக் கருதி செயலாற்றி வருகிறது. இளைஞர்களின் ஆற்றலை ஆக்கப்பூர்வமான வழியில் செலுத்தி, ஆரோக்கியமான வாழ்க்கைமுறையை ஊக்குவித்து, சமூகத்தில் நேர்மறையான மாற்றத்தை உருவாக்குவதே அரசின் தலையாய நோக்கமாகும்.
‘போதைப் பொருள் இல்லாத தமிழகம்' என்ற உன்னத இலக்கை நோக்கிய பயணத்தில், தூய்மையான, நேர்மையான மற்றும் அறநெறி சார்ந்த விளையாட்டுக் கலாச்சாரத்தை வளர்த்தெடுப்பதில் தமிழக அரசு உறுதி பூண்டுள்ளது. ஜூன் 26ம் நாள் சர்வதேச போதைப்பொருள் பயன்பாடு மற்றும் சட்ட விரோத கடத்தல் எதிர்ப்பு தினமாக கடைபிடிக்கப்படுகிறது.
இந்நாள் குறித்த விழிப்புணர்வை மாணவ மாணவியர்கள், இளைஞர்கள், விளையாட்டு வீரர்கள், பொதுமக்களிடையே ஏற்படுத்திட தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மூலம் “ஸ்டார்ட் Run ஸ்டாப் Drugs” போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு ஓட்டம் நடத்திட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. 5 கி.மீட்டர் தூரம் நடைபெறும் விழிப்புணர்வு ஓட்டம் ஜூன் 26-ம் நாள் அன்று காலை 6.30 மணி அளவில் விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாக நுழைவு வாயிலில் துவங்கி நடைபெறுகிறது.
இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ள விருப்பம் உள்ளவர்கள் மாவட்ட விளையாட்டரங்கத்தில் 78240 09970 / 04562-225947 என்ற தொலைபேசியின் மூலமாகவோ பதிவு செய்துக் கொள்ளலாம். 14 வயதிற்கு மேற்பட்டவர்கள் அனைவரும் இந்த ஓட்டத்தில் கலந்து கொள்ளலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.என்.ஓ.சுகபுத்ரா,I A S., அவர்கள் தெரிவித்துள்ளார்.
0
Leave a Reply